அடிமைப்பழக்கங்களிலிருந்து விடுபட
Cure For Addiction
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ (Two-way Video conferencing) அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
அடிமைப்பழக்கங்களை நிறுத்துவதற்கு மட்டுமல்ல,அவற்றைத் திடீரென நிறுத்தும்போது உடலில் சில தனித்தன்மையான அறிகுறிகளும் பின்விளைவுகளும்கூட தோன்றுகின்றன. அவற்றிலிருந்து விடுபடவும் இக் கிரியாவைப் பயிற்சிசெய்யுங்கள்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
1. ஸித்தாஸனம்
2. வ்யானகும்பகம்
3. கூர்மகும்பகம்
4. நாககும்பகம்
5. ஜோனீ ஆஸனம்
6. ப்ரக்ரு’திகும்பகம்
7. அக்னீஷோமாக்யகும்பகம்
1. ஸித்தாஸனம்
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 7 (விரிவாக்கு)
அத ஸித்தாஸனம்
யோனிஸ்தானகமங்க்ரிமூலகடிதம் ஸம்பீட்ய குல்பேதரம்
மேட்ரோபர்யத ஸந்நிதாய சிபுகம் க்ரு’த்வா ஹ்ருதி ஸ்தாபிதம் /
ஸ்தாணு: ஸம்யமிதேந்த்ரியோsசல-த்ரு’சா’-பச்’யன்-ப்ரு’வோரந்தரம்
ஏதந்மோக்ஷகபாடபேதனகரம் ஸித்தாஸனம் ப்ரோச்யதே// 2- 7
மொழிபெயர்ப்பு
ஒருவர், ஒரு குதிகாலை பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து, மறு குதிகாலை பிறப்புறுப்பின் மேல் வைத்து, முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைத்து, முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, தம் தீவிர உணர்ச்சிகளை வென்று, அமைதியாக அமர்ந்து, புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்துவது ஸித்தாஸனம் என்றழைக்கப்படும். இது வீடு பேற்றினை நோக்கி அழைத்துச் செல்கிறது.
செய்நுட்பம்- பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குதிகாலை வைத்து, பிறப்புறுப்பின் மேல் மறு குதிகாலை வைக்கவும்.
- முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைக்கவும்.
- முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, அமரவும்.
- புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்தவும்.
- இந்நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
2. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
வ்யானகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 66 (விரிவாக்கு)
அத வ்யானகும்பக:
பூரயித்வாந்தரா ஸம்யக் ஹ்ரு’ஜ்ஜகத்-வ்யாப்தி-யோகத: /
ஸர்வாகஸ்ய-ஆகுஞ்சநேன கும்பிதே ஸூக்ஷ்ம-சிந்தனாத் //
பார்வதீ-வக்த்ர-பேனோக்த: ஸம்யக் வ்யானஸ்யகும்பக: //66/
மொழிபெயர்ப்பு
இந்தக் கும்பகத்தின் போது காற்றை மார்பு முழுக்க நிரம்பி, உடம்பை முழுவதுமாக இறுக்க வேண்டும். அதனுடன் மிக நுட்பமாக உடம்பைக் கவனிக்கும் இதுவே தேவி பார்வதி தம் அதரத்தால் அருளிய வ்யான கும்பகமாகும்.
செய்நுட்பம்- ஆழமாக மூச்சை உள்ளிழுக்கவும்.
- மூச்சை உள்ளே நிறுத்தி, உடம்பை முழுவதுமாக இறுக்கவும். அடிவயிறு, தொண்டை, மார்பு, முதுகு என உடல் முழுவதும் இறுகுவதை, தீவிர விழிப்புணர்வு செலுத்தி, அகக் காட்சியில் கொண்டுவரவும்.
- மூச்சை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது, மூச்சை மெதுவாக வெளிவிட்டுத் தளர்வாகுங்கள்.
- இதனை 21 முறை செய்யவும். இயல்பான சுவாசத்திற்கு வரவும்.
3. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
கூர்மகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79 (விரிவாக்கு)
அத கூர்மகும்பக:
நிமீலோந்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: /
நேத்ரயோச்’வ ச’ரீரஸ்ய கூர்மகும்ப: ஸ உச்யதே // 79
மொழிபெயர்ப்பு
கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டை போல்வைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும்போது நிகழும் கும்பகம் கூர்மகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்- அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
- உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
- இமைகளை இமைக்காதீர்கள். கண்பாவையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள்.
- இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும்போது தளர்வாகுங்கள்.
- இதை 21முறை செய்யுங்கள்.
4. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
நாககும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77,78 (விரிவாக்கு)
அத நாககும்பக:
ஓதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: /
தம் ரோகயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு’டம் // 77
கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி’வோதித: /
க்ஷுதாம் ஜயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம். இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- பின் தாடையை நெஞ்சின் மீது வையுங்கள்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21முறை செய்யுங்கள்
5.ஜோனீ ஆஸனம்
அத ஜோனீ ஆஸனம்
தோஉ பகதலீ ஸம்புட கரை ஏடீ மேட்ர கே டிங்க தரே /
அர்த ஹாத கோ அந்தர் ராகை லிலாட பகதல்யா உபர தாகேம் // 215
தஸே ஆங்குரீ அக்ர மிலாவை பணா அக்ர பர லே பஹராவைம் /
கஹுணீ லோம் பூபரி கர தாகை நலீ அர கஹூணீ மிலி டாம் ராகே // 216
ஸம கரி ராகை ஸகல ஸரீர நாஸாத்ரிஷ்டி லகாவே தீர /
முக மாரக ஸோ வாஈ கஹை அஸக்த ஹோய தஹாம் லௌ ரஹே // 217
இடா நாடி கர பவன உதாரே வார ஸாத யா ஜுகதி விசாரை /
சடதௌ சடதௌ கும்பக ஸாதை வார ஸாத யா ஜுகதி அராதை // 218
பந்த ஹோய மலமூத்ர கோ வாயவிக்ரஹை கோய /
யா ஆஸன கை கரதஹீ த்ரவீபூத ஸோ ஹோய // 219
செய்நுட்பம்- கால்களை நீட்டியவாறு தரையில் அமரவும், பின்பு முழங்கால்களைப் பக்கவாட்டில் அகலமாக விரித்துக் கொள்ளவும்.
- இரண்டு குதிங்கால்களை ஒன்று சேர்க்கவும்.
- முன்பக்கமாகக் குனிந்து தலையைக் குதிகாலின் மேல் வைத்துக்கொள்ளவும்.
- இரு கை விரல்களையும் கோர்த்து முன்னங்கைகளைத் தரையில் வைக்கவும்.
- மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்
6. ஜோனீ ஆஸனத்தில் இருந்தபடியே
ப்ரக்ரு’தி:கும்பக:,
அத ப்ரக்ரு’தி:கும்பக:
வாந்விதேனாசு’கம் கர்ஷந் குர்வந்தூச்சதரம் ஸ்வநம்/
தாரயேச்சே-துதானஸ்ய ப்ரக்ரு’தி:கும்பக: ஸ்ம்ரு’த: // 70
மொழிபெயர்ப்பு
ஒருவர், ‘வா’ எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்- அதே ஆஸனத்தில் அமரவும்.
- ‘வா’ எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வையுங்கள்.
- பிறகு மெதுவாகச் சாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21முறை செய்யுங்கள்.
குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.
7. ஜோனீ ஆஸனத்தில் இருந்தபடியே
அக்னீஷோமாக்யகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம்- 87 (விரிவாக்கு)
அத அக்னீஷோமாக்யகும்பக:
ஸூர்யேண பூரயேத் ப்ராணம் கும்பயித்வா யதாவிதி: /
ரேசயேத்-அன்யமார்கேண புனஸ்தேன ப்ரபூரயேத் //
யேன த்யஜேத்-தேனாபூர்ய சாக்னி-ஷோமாக்யகும்பக: //87
மொழிபெயர்ப்பு
பிராணன், ஸூர்ய நாடி (வலது நாசி) வழியாக உள்ளிழுக்கப்பட்டு, கூறப்பட்டுள்ள முறையில் அடக்கி, அடுத்த நாசி வழியாக வெளியிடப்பட வேண்டும். இப்போது வெளிவிட்ட நாசி வழியாகவே பிராணன் உள்ளிழுக்கப்பட வேண்டும். இது அக்னீஷோமாக்யகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்- அதே ஆஸனத்தில் அமரவும்.
- வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.
- மூச்சை உள்ளடக்கவும்.
- இடது நாசி வழியாக மூச்சை வெளியிடவும்.
- இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.
- மூச்சை உள்ளடக்கவும்.
- மூச்சை வலது நாசி வழியாக வெளிவிடவும்.
- இதை 21 முறை செய்யவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.